கண்ணற்ற குருடனாய் காதவழி நடந்து விட்டேன்
எண்ணற்ற இடர்களை தாண்டி நிதம் சோர்ந்துவிட்டேன்
புண்ணற்ற இடமின்றி வலிதாங்கி துயருற்றேன்-அம்மா
புன்னை நல்லூர் தாயே!-உன்
எண்ணற்ற கரங்கள் தொட்டு எனை புதிது செய்தாய்!
புரியவைத்தாய்! பொற்பதங்கள் சரணடைந்தேன்..!
ஆழிசூழ் உலகெலாம் படைத்து தினம்
ஆட்சிசெய் அம்மையே போற்றி போற்றி!
வாழி நின் கொற்றமெலாம் என வாழ்த்திட
வாய்த்த நல் தகுதியிலா ஏழை வணங்கிநின்றேன்
புன்னைவனத்தாயே! எனை ஏற்றம்புரிய வைப்பாயே..!