கனிவு மிகும் விழி பார்த்தேன் அம்மா!-அதில் வழியும்
இனிமைதரும் மொழி கேட்டேன் அம்மா!
துணிவுதரும் துயர்போக்கும் உயர்வினிலே
பணிவுதரும் அபயகரம் பற்றினேன் அம்மா!
புன்னை நல்லூர் தாயே!-உன்னை
வணங்கி நின்றேன் நானே!
சொல்லுக்குள் பொருளாக சொக்கி நின்றாய்!
வில்லுக்குள் விசையாகி உலகை வென்றாய்!
கல்லுக்குள் தேரைக்கும் கருணை தந்தாய் !
உள்ளுக்குள் உனைவைத்த என்னை காப்பாய் !
புன்னை நல்லூர் தாயே..! -உன்னை
சரணடைந்தேன் காப்பாயே..!