ஞாயிறு, 29 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 5

எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

வீரம் விதைத்தவள்! வெற்றி தருபவள்!
ஈரம் மிகுந்தவள் எங்கள் முத்துமாரி!

எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

பாரம் குறைத்தவள்! பக்தி கொடுத்தவள்!
தீரம் நிறைந்தவள்! எங்கள் முத்துமாரி!

எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

வெற்றி தருபவள்! வித்தை தருபவள்!
பற்றிட பாவங்கள் முற்றிலும் தீர்ப்பவள்!

எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

சுற்றிவரும் பகை சூதை அழிப்பவள்!
கற்றறிந்தார் தினம் பாடிடும் பாட்டவள்!


எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

செவ்வாய், 17 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 4

நேரம் இருட்டாகலாம்
நீ வெளிச்சமாயிருப்பாய்...!

பாதை நீளமாயிருக்கலாம்-நீ
பக்கத்துணையிருப்பாய்...!

நடக்கும் வழியெலாம்
நீயென் கை பிடித்து
நடந்து வருவாயென்ற
நம்பிக்கை ஒன்று கொண்டே
நடந்து கொண்டேயிருக்கிறேன்-தாயே
புன்னைநல்லூர் பூமகளே!
என்
நம்பிக்கை கலையாமல்
நடந்து வா என்னோடு
எப்போதும்...!

சனி, 14 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 3

கரும்புள்ளியை பெரும்புள்ளியாக்குவாய்!
பெரும்புள்ளியை முற்றுப்புள்ளியாக்குவாய்!

அசைவை அபிநயங்களாக்குவாய்!
அபிநயங்களை அசைவற்று மாற்றுவாய்!

திரையை சித்திரமாக்குவாய்!
சித்திரங்களை விசித்திரமாக்குவாய்!

ஒரு சொல்லை கவிதையாக்குவாய்!
காவியங்களை காலால் இடறுவாய்!

மனமுருக வேண்டிடில்
மனதிற்குள் சிரித்து நிற்பாய்!
இதுபோல்
உளறிக் கொட்டுவதையெல்லாம்
உட்கார்ந்து கேட்பாய்!

புன்னைநல்லூர் தாயே!
உன்னை வணங்குகிறேன்!

திங்கள், 9 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 2

காற்றில் கையறு நிலையில்
ஆதரிப்பார் யாருமின்றி
அநாதையாய்
அலைபாய்ந்து வந்த
காட்டுப்பூ விதை நான்..
எனை
தாங்கி தயைகாட்டி
தங்குமிடம் கூட்டி
நிலமாய் நின்மடிதனிலே
நித்தமும் இளைப்பாற்றி
மரமாய் நிழல் தருவாய்
மாற்றிய பூமகளே!
புன்னைநல்லூர் தாயே!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
சிறியேனை ஆதரிப்பாயே!

வெள்ளி, 6 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 1

ஆடும் கால்களில் அணிசெயும்
ஆரம் ஒலியுடன் அதிர அதிர
பாடும் பவளவாய் மலர்விரித்தென்
பாரம் தணித்திட மொழிவாய்!-தாயே!

உள்ளத்தழுக்கினை எரித்திட தீயெடுத்து
உயிருக்குள் விளக்கினை ஏற்றிவைப்பாய்!
கள்ளப்புலனைந்தும் கட்டிப்புறந்தள்ளும்
கயிறுக்குள் கருவாய் வீற்றிருப்பாய்!

பிச்சையெடுத்தேனும் இச்சை தணித்திடும்
பிறவிப் பெருங்கடலில்
மூச்சையடக்கிட மோகம்நெறித்திட
கற்றுக் கொடுத்தவளே!-தாயே!

உச்சிமலைச்சுடர் நெற்றித்திலகமாய்
ஒளிர்ந்திட வருபவளே !
நிச்சயமாய் துயர் எட்டி விரட்டிடும்
நின்பதம் சரணமம்மா!

திங்கள், 2 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

தங்கநிறத்தொரு பட்டுடுத்தி

தரணியெல்லாம் உந்தன் புகழ்பரப்பி

வாளொடு கரங்கொண்டு வருபவளே!-எம்மை

வாழ வைக்கும் எங்கள் குலமகளே!