வெள்ளி, 6 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 1

ஆடும் கால்களில் அணிசெயும்
ஆரம் ஒலியுடன் அதிர அதிர
பாடும் பவளவாய் மலர்விரித்தென்
பாரம் தணித்திட மொழிவாய்!-தாயே!

உள்ளத்தழுக்கினை எரித்திட தீயெடுத்து
உயிருக்குள் விளக்கினை ஏற்றிவைப்பாய்!
கள்ளப்புலனைந்தும் கட்டிப்புறந்தள்ளும்
கயிறுக்குள் கருவாய் வீற்றிருப்பாய்!

பிச்சையெடுத்தேனும் இச்சை தணித்திடும்
பிறவிப் பெருங்கடலில்
மூச்சையடக்கிட மோகம்நெறித்திட
கற்றுக் கொடுத்தவளே!-தாயே!

உச்சிமலைச்சுடர் நெற்றித்திலகமாய்
ஒளிர்ந்திட வருபவளே !
நிச்சயமாய் துயர் எட்டி விரட்டிடும்
நின்பதம் சரணமம்மா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக