புதன், 22 ஜூன், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 8

எங்கும் நிறை மங்கலமே!-எழில்

பொங்கும் அருள் பொன்கலமே!

நெஞ்சம் நிறை செழுஞ்சுடரே!-தீய

வஞ்சம் அற எழும் கதிரே!


தமிழ் கொடுத்தாய்!தலை நிமிர வைத்தாய்!

நெஞ்சில் அறம் வளர்த்தாய்!எனை ஆதரித்தாய்!

கனல் வளர்த்தாய்! நன்றாய் கனிய வைத்தாய்!

புன்னை வனத்தாய்! என்றும் நீயே என் தாய்!





வெள்ளி, 10 ஜூன், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 7

மறந்திடினும் நினைத்திடினும்
மனச்சிறையில் அடைத்திடினும்
திறந்தொளிரும் திகழ் ஒளியே!
கவிச்சுடரே! கலையமுதே..!

தனித்தமிழ் போல்
இனித்த நறுங் கனியமுதே..!
பனித்த விழி நனைந்திருக்க -நான்
பார்க்கும் எழில் கலையழகே..!

அம்மா..!
புன்னைவனத் தாயே..!-எனை
புகழ்பெறச் செய்வாயே..!

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 6


சுகிக்க கரைந்தோடும் உலகச்
சுகமனைத்தும்...
சுந்தரி நின் கருணைத் திருவிளக்கோ
ரசிக்க கணந்தோறும்
வளர்ந்து நிறைந்தொளிரும்..!

உருண்டிடும் காலம் கூட
உணர்ந்து நான் சுகிக்க சுகிக்க
உறையாது துளித்துளியாய்
கரைந்து தான் மெல்ல மெல்ல
காணாமல் போயொழியும்....

காலமும் கடந்த எந்தன்
கற்பகத்தருவே நின்னருள் நீழல் மட்டும்
சுகித்திட மேலும் மேலும்
வளர்ந்திடும்! சிறந்திடும் எங்கும்!

அம்மா!
கருணைக்கடலே!
கடலின் எழு முழு ஞாயிறே!
புன்னை நல்லூர் தாயே..!
உன்னை வணங்குகிறேன்..!